திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.4 திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை
வட்ட னைமதி சூடியை வானவர்
சிட்ட னைத்திரு வண்ணா மலையனை
இட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும்
அட்ட னையடி யேன்மறந் துய்வனோ.
1
வான னைமதி சூடிய மைந்தனைத்
தேன னைத்திரு வண்ணா மலையனை
ஏன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த
ஆன னையடி யேன்மறந் துய்வனோ.
2
மத்த னைமத யானை யுரித்தவெஞ்
சித்த னைத்திரு வண்ணா மலையனை
முத்த னைமுனிந் தார்புர மூன்றெய்த
அத்த னையடி யேன்மறந் துய்வனோ.
3
காற்ற னைக்கலக் கும்வினை போயறத்
தேற்ற னைத்திரு வண்ணா மலையனைக்
கூற்ற னைக்கொடி யார்புர மூன்றெய்த
ஆற்ற னையடி யேன்மறந் துய்வனோ.
4
மின்ன னைவினை தீர்த்தெனை யாட்கொண்ட
தென்ன னைத்திரு வண்ணா மலையனை
என்ன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த
அன்ன னையடி யேன்மறந் துய்வனோ.
5
மன்ற னைமதி யாதவன் வேள்விமேற்
சென்ற னைத்திரு வண்ணா மலையனை
வென்ற னைவெகுண் டார்புர மூன்றெய்த
கொன்ற னைக்கொடி யேன்மறந் துய்வனோ.
6
வீர னைவிட முண்டனை விண்ணவர்
தீர னைத்திரு வண்ணா மலையனை
ஊர னையுண ரார்புர மூன்றெய்த
ஆர னையடி யேன்மறந் துய்வனோ.
7
கருவி னைக்கடல் வாய்விட முண்டவெந்
திருவி னைத்திரு வண்ணா மலையனை
உருவி னையுண ரார்புர மூன்றெய்த
அருவி னையடி யேன்மறந் துய்வனோ.
8
அருத்த னையர வைந்தலை நாகத்தைத்
திருத்த னைத்திரு வண்ணா மலையனைக்
கருத்த னைக்கடி யார்புர மூன்றெய்த
அருத்த னையடி யேன்மறந் துய்வனோ.
9
அரக்க னையல றவ்விர லூன்றிய
திருத்த னைத்திரு வண்ணா மலையனை
இரக்க மாயென் உடலுறு நோய்களைத்
துரக்க னைக்தொண்ட னேன்மறந் துய்வனோ.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.5 திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை
பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம்
இட்ட மாக இரந்துண் டுழிதரும்
அட்ட மூர்த்திஅண் ணாமலை கைதொழக்
கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே.
1
பெற்ற மேறுவர் பெய்பலிக் கென்றவர்
சுற்ற மாமிகு தொல்புக ழாளொடும்
அற்றந் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ
நற்ற வத்தொடு ஞானத் திருப்பரே.
2
பல்லி லோடுகை யேந்திப் பலஇலம்
ஒல்லை சென்றுணங் கல்கவர் வாரவர்
அல்லல் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ
நல்ல வாயின நம்மை அடையுமே.
3
பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர்
ஓடிப் போயினர் செய்வதொன் றென்கொலோ
ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடிப் போகுநம் மேலை வினைகளே.
4
தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம துள்ள வினைகளே.
5
கட்டி யொக்குங் கரும்பி னிடைத்துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்
அட்ட மூர்த்திஅண் ணாமலை மேவிய
நட்ட மாடியை நண்ணநன் காகுமே.
6
கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர்
பாணி நட்டங்க ளாடும் பரமனார்
ஆணிப் பொன்னினண் ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே.
7
கண்டந் தான்கறுத் தான்காலன் ஆருயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்
அண்டத் தோங்கும்அண் ணாமலை கைதொழ
விண்டு போகுநம் மேலை வினைகளே.
8
முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின்
அந்தி வாயொளி யான்றன்அண் ணாமலை
சிந்தி யாஎழு வார்வினை தீர்த்திடுங்
கந்த மாமலர் சூடுங் கருத்தனே.
9
மறையி னானொடு மாலவன் காண்கிலா
நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன்
உறையும் மாண்பின்அண் ணாமலை கைதொழப்
பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com